search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைக் கிடங்கு"

    சென்னை குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த கை, கால்களுக்கு உரிய பெண் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதல் தகராறில் மனைவியை தீர்த்து கட்டிய சினிமா உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர். #BodyPartsInDumbyard #WomanKilled
    சென்னை:

    சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் இரண்டு கால்கள் கிடந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கை மற்றும் கால்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    துண்டிக்கப்பட்ட கையில் டிராக் படமும், சிவன்-பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    இரண்டு கால்களும், ஒரு கையும் மட்டுமே கிடைத்த நிலையில் மற்ற உடல் பாகங்களை போலீசார் தேடினர். கொலை செய்யப்பட்டவர் நுங்கம்பாக்கம் அல்லது கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    எனவே உடல் பாகங்கள் அந்த பகுதியில் வீசப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதே நேரத்தில் குப்பை கிடங்குகளில் உடல் பாகங்கள் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உடல் பாகங்களை தேடி அலைந்தனர். ஆனால் உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து உடல் பாகங்களை தேடும் பணியை கைவிட்ட போலீசார் துண்டிக்கப்பட்ட இரண்டு கால்களையும், கையையும் ஒன்றாக வைத்து புகைப்படம் எடுத்து போஸ்டர்களாக அச்சிட்டு வெளியிட்டனர்.



    சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாயமான 70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் போட்டோக்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் கொலையுண்ட பெண் யார் என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கி உள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டது.

    மாயமான பெண்களின் விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தபோது சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் மட்டும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

    இதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் சந்தியாவாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதன்படி விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவி சந்தியாவை பாலகிருஷ்ணன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.

    மனைவியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி பாலகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது. பாலகிருஷ்ணன் சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார்.

    அவரது சொந்த ஊர் தூத்துக்குடி. சந்தியா கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோக யாத்ரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் படித்து வருகிறார்கள்.

    ஜாபர்கான்பேட்டை பாரி நகர் காந்தி தெருவில் தனியாக வீடு எடுத்து பாலகிருஷ்ணனும், சந்தியாவும் தங்கி இருந்தனர். சினிமா உதவி இயக்குனராக இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி சந்தியாவை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது சந்தியாவுக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை பாலகிருஷ்ணன் பலமுறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறிலேயே சந்தியாவை அவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை வீசியதும் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் ஜாபர்கான்பேட்டை பகுதியிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #BodyPartsInDumbyard #WomanKilled
    ×